அய்யனார் மூன்று புத்தக வெளியீட்டு விழா - திருவண்ணாமலையில்
0 சொல்லிட்டுப்போனவங்க ஆக்கம் கென்., at Tuesday, March 09, 2010
நன்றி: திரு.பவா செல்லதுரை
திருவண்ணாமலையில் வம்சி புக்ஸ் பதிப்பகத்தின் சார்பாக இரண்டு நாட்கள் புத்தக வெளியீட்டு விழா
வம்சி புக்ஸ் பதிப்பகத்தின் சார்பாக 5 புது புத்தகங்களின் வெளியீட்டு விழா 13.03.2010 அன்று மாலை 6.00 மணிக்கு திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் கர்மேல் கிண்டர் கார்டன் பள்ளியில் நடைபெற உள்ளது. விழாவினை மாவட்ட ஆட்சி தலைவர் மு. இராஜேந்தின் ஐ.ஏ.எஸ். துவக்கி வைத்து உரையாற்றுகிறார்கள். விழாவின் முதல் அமர்வாக மலையாள மொழியில் கே.ஆர். மீரா அவர்கள் எழுதி தமிழில் கே.வி. ஷைலஜா மொழிபெயர்த்த " சூர்ப்பனகை" என்ற சிறுகதை தொகுப்பை எழுத்தாளர் ஜி. திலகவதி ஐ.பி.எஸ். காவல் துறை கூடுதல் தலைவர் அவர்கள் வெளியிட, எழுத்தாளர் சந்திரபோஸ் பெற்றுக்கொள்கிறார். புத்தகம் குறித்து கற்றது தமிழ் பட இயக்குனர் ராம் உரையாற்றுகிறார்.
இரண்டாவது அமர்வாக பின்னி மோசஸின் ” நடுங்கும் கடவுளின் கரங்களிலிருந்து” என்ற என்ற கவிதை தொகுப்பை வெண்ணிலா கபடி குழு இயக்குனர். சுசீந்திரன் வெளியீட, எழுத்தாளர் பவாசெல்லதுரை பெற்றுக்கொள்கிறார். புத்தகம் குறித்து எழுத்தாளர் பாஸ்கர் சக்தி உரையாற்றுகிறார்.
மூன்றாவது அமர்வாக அய்யனார் விஸ்வநாத்தின் மூன்று புத்தகங்கள் வெளியிடப்படுகின்றது. மூன்று புத்தகங்களையும் கவிஞர் சமயவேல் வெளியிடுகிறார். ”உரையாடலினி” என்ற சிறுகதை தொகுப்பை நம் தினமதி நாளிதழின் ஆசிரியர் பி. நடராஜன் பெற்றுக்கொள்கிறார். புத்தகம் குறித்து இயக்குனர். சந்திரா உரையாற்றுகிறார். தனிமையின் இசை” என்ற கவிதை தொகுப்பை திரு. வி. ரமேஷ் பெற்றுக்கொள்கிறார். புத்தகம் குறித்து கவிஞர். தமிழ்நதி உரையாற்றுகிறார். ”நானிலும் நுழையும் வெளிச்சம்” என்ற கவிதை தொகுப்பை புகைப்பட கலைஞன் பினுபாஸ்கர் அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். புத்தகம் குறித்து எழுத்தாளர் அ. முத்துக்கிருஷ்ணன் அவர்கள் உரையாற்றுகிறார்கள். சி. பலராமன் நன்றிகூற முதல் நாள் விழா நிறைவு பெறுகிறது.
இரண்டாவது நாள் 14.03.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி அளவில் 4 புத்தகங்களின் வெளியீட்டு விழா அதே இடத்தில் நடைபெறுகிறது. விழாவினை திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர் திரு. கு. பிச்சாண்டி எம்.எல்.ஏ. துவக்கிவைக்கிறார். முதல் அமர்வாக மலையாள மொழியில் சந்தோஷ் ஏச்சிக்கானம் எழுதி தமிழில் கே.வி. ஜெயஸ்ரீ மொழிபெயர்த்த ”ஒற்றைக் கதவு” என்ற சிறுகதை தொகுப்பை எழுத்தாளர் பிரபஞ்சன் வெளியிட, ஏ.எல்.சி.யின் பொது செயலாளர் அறிவர். ரிச்சாட் பாஸ்கரன் பெற்றுக்கொள்கிறார்.
இரண்டாவது அமர்வாக பி.ஜே. அமலதாஸ் தொகுத்த ”இன்றும் வாழும் தெருக்கூத்து” என்ற புத்தகத்தை திரைப்பட கலைஞர் நாசர் வெளியிட கவிஞர். இளையபாரதி பெற்றுக்கொள்கிறார். புத்தகம் குறித்து முனைவர் பார்திபராஜா உரையாற்றுகிறார்.
மூன்றாவது அமர்வாக கே.ஸ்டாலினின் ”பாழ் மண்டபம் ஒன்றின் வரைபடம்” என்ற கவிதை தொகுப்பை கவிஞர். ரவி சுப்ரமணியன் வெளியிட, கவிஞர் அய்யப்ப மாதவன் பெற்றுக்கொள்கிறார்.
நான்கவது அமர்வாக வெ. சுப்ரமணியபாரதியின் ”வெ. சுப்ரமணிய பாரதி கதைகள்” என்ற சிறுகதை தொகுப்பை எழுத்தாளர் நா. முருகேச பாண்டியன் வெளியிட உயிர்எழுத்து ஆசிரியர் சுதிர் செந்தில் பெற்றுக்கொள்கிறார். நிறைவாக கே. முருகன் நன்றியுரை கூற விழா நிறைவு பெறுகிறது.
வரும் சனிக்கிழமை மாலை என்னுடைய மூன்று புத்தகங்களின் வெளியீட்டு விழா திருவண்ணாமலையில் நடக்க இருக்கின்றது. தமிழ்நதி,சந்திரா மற்றும் முத்துக் கிருஷ்ணன் ஆகிய நண்பர்கள் புத்தகங்கள் குறித்து பேச இருக்கின்றனர். இந்த அறிவிப்பை அழைப்பாக ஏற்று நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் வெள்ளிக்கிழமை காலையிலிருந்து நீங்கள் என்னை 9952236058 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
அன்புடன்--
Ayyanarviswanath
அய்யனார் விஸ்வநாத்
http://ayyanaarv.blogspot.com
Labels: அறிவிப்பு

ஒரு வார்த்தையின் நீளும்
முரண்களில் வெளிப்படலாம்
சிறு வன்மம்
சிறு கோபம்
சிறு அலட்சியம்
சிறு புறக்கணிப்பு
அல்லது
துரோகம்
அதே வார்த்தையின் மறுமுனையில்
கட்டியாளப்படலாம்
பெரும் அன்பு
பெரும் ஆசுவாசம்
பெரும் விழிப்பு
பேரானந்தம்
அல்லது
காதல்
Labels: கவிதை
இங்கிலாந்து ஜோ வும் எழுத்தாளர் பேயோனும்..,
10 சொல்லிட்டுப்போனவங்க ஆக்கம் கென்., at Wednesday, February 24, 2010
எழுத்தாளர் பேயோனின் பத்தி எழுதுவது எப்படி அல்லது அவரைப்போல பத்தி எழுதுவது எப்படி என்கிற கட்டுரையை அடியொற்றி எழுதப்பட்டது.
சமர்ப்பணம் : எழுத்தாளர் பேயோன்
நீர் சுரக்கும் ஆற்றின் மணலினுள்
மினுங்கும் நிறமெது
பூ முறிக்கும் கரத்தில் ஒட்டிக்
கொள்ளும் வனமெது
ஊழ்வினை பாழும் நகர்வுகளில்
தேய்பிறையின் கூரிய அழிவுகளில்
தொலைத்த நிலா தேடுதல்
நிற்பது எங்கனம்
நேற்றைக்கு காலையிலிருந்த மனநிலையில் நேரடியாகவே பாருக்குப் போய்விடலாம் என்றிருந்தேன். மற்றைய அலுவல வேலைகளின் நிலை மனதில் மோத போன நிமிடத்திலிருந்து பரபரப்பாய் வேலைகள் நடு நடுவில் ஜிமெயில் அழைப்புகளுக்கான பதிலகள் என ஓடி நிமிர்கையில் என்னைத்தவிர எல்லாரும் சாப்பிடப்போய்விட்டிருந்தார்கள். அப்போதுதான் பசி உணர்த்தியது நேரத்தை. மெல்ல எரிச்சல் மண்ட எழுந்தவன் சோம்பல் முறித்தவாறு, கம்ப்யூட்டரை லாக் ஆப் செய்தேன்.
எக்ஸ்கியூஸ் மீ என்றொரு குரலின் இனிமையில் நிமிர்ந்தவன் மெல்ல குளிர்ந்து போனேன். ஐந்தடிக்கும் ஆறடிக்கும் இடையில் ஜீன்ஸ் உடலோடு பிடித்திருக்க, வெண்ணிற சட்டையின் அநாவசிய கை மடிப்பில் தெரிந்தது அவளின் அழகு. திரண்ட செழுமை சட்டையை சேர்த்திழுக்க ஹல்லோ என்றவளின் மறுகுரலில் , வெகு அலட்சியமான ( அலட்சியத்தை வரவழைத்துக்கொண்ட) குரலில் ஹாய் என்றேன்.
தான் இங்கிலாந்த் நாட்டிலிருந்து வந்திருப்பதாகவும் எங்கள் நிறுவனத்தின் பெட்ரோலிய அலுவலகப்பிரிவில் ஆப்ரேசன் மனேஜராக சேர்ந்திருப்பதாகவும் பேசிக்கொண்டிருந்தாள். பெயரை மரிமில்லா ஜோன் என்று எதையோ சேர்த்துக்கூறினாள். நான் வழக்கம்போல ஓகே என்று சிரித்து வைத்தேன். என் அலுவலகத்தில் என்னை எவரும் இவளுக்கு ஏன் அறிமுகப்படுத்தி வைக்கவில்லை என்றொரு கேள்வி எனக்குள் எழ எப்போது வேலைக்கு சேர்ந்தீர்கள் என்றேன். அவளோ தான் சேர்ந்து மூன்று நாட்களாகிறது என்றும் தான் அறிமுகம் செய்து கொள்ள வந்தபோது தாங்கள் இல்லையென்றாள். சரி போ , நம்மைதான் மானேஜர் மனுசனாகவே நினைக்கிறதில்லையே , அவனே சொல்லியிருப்பானா இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.
சிறிது நேரம் என்னப் பேசுவதென்ற நிலையில் அவளாக கேட்டாள் , மதிய சாப்பாட்டிற்கு எங்கு போகலாம் என, நான் சில பெரிய ஹோட்டல்களின் பெயரை சொல்லிவிட்டு அங்கெல்லாம் போகலாம் என்றேன்.
அவளோ வா போகலாம் என்றாள். அட இதென்னடா வம்பா போச்சு என்று நினைத்தவாறு , நான் நான்வெஜ் சாப்பிடுவதில்லை , அதும் இல்லாம இன்னைக்கு சாப்பிடற மூடே இல்லையென்றேன். பின்னே அவ பாட்டுக்குக்கூப்பிட்டு போயி ஸ்பூன் , போர்க்குன்னு வச்சிட்டு சாப்பிட ஆரம்பிச்சிட்டா என் நிலைமை என்ன ஆகிறது என்கிற பயத்தில் நான் சாப்பிடுவதாயில்லை என்றேன் ஓரேடியாக. அவளோ விடாக்கண்டியாக என் கூட வந்து கம்பெனி கொடு , ஜீஸ் மட்டும் குடித்தாள் போதுமென்றாள்.
இவள் நம்மை ஏன் நோண்டுகிறாள் என்று எரிச்சலுடன் தலையாட்டியாவாறு மெல்லிய குரலில் நான் பாருக்குப் போகிறேன், என்னால் தங்களுடன் தற்சமயம் வரவியலாது என்றேன். என்னையும் மீறி என் கோபம் குரலில் தெறித்திருக்க வேண்டும். சற்று நிமிடம் முகம் சுண்டி யோசித்தவள், சட்டென பிரகாசமாய் வா போகலாம் என்றாள். இனிமேலும் இவளை பேச விட்டால் ஆபத்தாய் முடியும் தொலையட்டும் என்னைக்கு இருந்தாலும் நம்மோட கோப அக்னியில் சாம்பலாகப் போகிறவள்தானே என்று உள்ளுக்குள் நினைத்தவாறு எழுந்து வந்தேன். சாப்பிட்டு விட்டு எதிரில் வந்து கொண்டிருந்த என் மானேஜர் என்னை முறைத்தபடி அவளிடம் வந்து, இவர் நம் கேபிளிங்க் டீமோட எக்ஸீகீயுசன் ஹெட், கடந்த வாரத்தில் இருந்து பெட்ரோலிய புராஜெக்ட்ஸ்ம் ஹாண்டில் பண்றார் என்றபடி என்னைப்பார்த்து ஒரு கேலி சிரிப்பை விட்டார்.
எனக்கென்ன என்கிற போக்கில் நின்றுகொண்டிருந்தவனின் தோளில் தட்டி , டேக் கேர் திஸ் இஸ் அவர் நீயூ பிசினஸ் மானேஜர் பார் பெட்ரோலியம் கம்பெனிஸ் என்றார்.
நான் வழக்கம்போல தலையாட்டி வைத்தேன். இந்த பெட்ரோலிய கம்பெனிகளின் புராஜெக்ட்ஸ் என்பது நட்ட நடு பாலைவனத்தில் 100 டிகிரி செல்சியஸில் நிர்வாணமாக படுத்துக்கிடப்பதுக்கு சமம்.
சூரியனின் பொட்டை வெயில் கிரகணங்கள் உடலின் செல்களுக்குள் அடுப்பைப்பற்ற வைக்க, எங்கெங்கு காணினும் மணல், அலைகளாய் பிறை வடிவில் கிடக்கும். நிர்ச்சலமனற்ற வெக்கை வீசிக்கொண்டிருக்கும். எங்கிருந்தோ ஒரு துளையிலிருந்து சேகரித்த குருடாயிலின் பல கரங்களாய் பெட்ரோலிய குழாய்கள் பாதி பதிந்த நிலையில் மணல் மூடிக்கிடக்கும். இதையெல்லாம் பைபர் கேபிள்களால் இணைப்பதுதான் எங்களின் வேலை. பாதுகாப்பின் ஆயிரம் விதிகளை தாண்டி பொட்டை வெயிலில் நிற்பது என்பது திருமண மாப்பிள்ளையை பட்டு வேட்டி ,பட்டு சட்டையோடு திருமண சமையல் அடுப்பில் விறகை தள்ள விடுவதற்கு சமம். எல்லா பெட்ரோலிய கிணறுகளுக்கு அருகிலும் இருக்கும் ஒரு கணக்கீட்டு சாதனத்தை நெட்வொர்க்கில் இணைப்பதுதான் பணி. இதில் சிக்கல் என்னவென்றால், பைபர் கேபிள் பெட்ரோலிய குழாய்களை எங்கும் கிராஸ் செய்யக்கூடாதென்பது அவர்களின் விதி. விதிகள் என்பது மீறப்படுவதற்காகவே தயாரிக்கப்படுகிறதோ என்கிற சந்தேகம் வெகு நாட்களாய் உண்டெனக்கு, அதுவும் இந்த புராஜெக்ட் மானேஜரோ தான் மட்டுமே இந்த உலகத்தைத் தாங்கிப்பிடித்திருப்பதாய் நம்பிக்கொண்டிருக்கிறார். எரிக் ரோத்தின் என்கிற பெயரை எங்களின் மக்கள் காண்டு ரோத் என்கிறார்கள். இங்கு காண்டு என்பதன் அர்த்தம் புரியாமலே வெகு நாட்களாய் நான் உபயோகித்திருந்தேன், பிறகொரு நாளில்தான் புரிந்தது அதன் அர்த்தம். என்னவெல்லாம் மக்கள் யோசித்து பெயர் சூட்டுகிறார்கள் என உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன்.
சட்டென சமநிலைக்கு வந்த நான், என்னருகில் நிற்பவளை அழைத்தபடி அந்த பாருக்குள் சென்றேன். அது ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலின் இணைக்கப்பட்ட பார். மதியம் இரண்டு மணிக்கு மொத்த இடமும் நிரம்பி வழிந்தது. அரைக்கால் சட்டை அணிந்த யுவதிகள் ஆளுக்கொரு வர்ண திரவ கோப்பையுடன் ஏதோ ஒரு ஆணுடன் பேசுவதாய் பாவனை செய்துகொண்டிருந்தார்கள். நானும் ஜோனும் ஆளுக்கொரு இடத்தை தெரிவு செய்தோம் , பிறகு என்ன நினைத்தாளோ நான் தெரிவு செய்த இடத்திற்கே வந்தமர்ந்தாள். அவளுக்கு பீர் என்றாள் , நான் வழக்கம்போல ********* பிராந்தியை ஆர்டர் செய்தேன். பிராண்ட் பெயரை எழுதினால் விளம்பரமாகிவிடும் என்பதால் இங்கு மறைப்புக்குறிக்குள் அடைத்திருக்கிறேன். வந்த வேகத்தில் சியர்ஸ் எல்லாம் எதிர்பார்க்காமல் அப்படியே உள்ளுக்குள் சாய்த்து விட்டு தொண்டை எரிய , கண்கள் தளும்பிட உள் நுழையும் அசுரனை அனுபவித்து விட்டு நிமிர்ந்தால், என்னை எரிப்பவளைப் போல பார்த்துக்கொண்டிருந்தாள் ஜோ. என்னவென்றேன். இந்தியர்கள் ஏன் இப்படி குடிக்கிறார்கள், குடி என்பது உங்களைப் பார்க்கையில் வெகு அநாகரீகமாய் படுகிறது என்று அவள் பார்த்த கேட்ட கேவல இந்தியர்களைப்பற்றி பேசிக்கொண்டிருந்தாள். இந்திய டெல்லி ஆக்ராக்களில் கண்ட பிச்சைக்காரர்கள், குப்பைகள், சாக்கடையோர மனிதர்கள், ஏமாற்றிய டாக்ஸி டிரைவர்கள், நெஞ்சின் மேலாய் பார்வையை எடுக்காத நாகரீக ஆட்கள் என மொத்த இந்திய கேவலத்தின் பிரதிநிதியாக நான் அவளின் வசவுகளை வாங்கிக்கொண்டிருந்தேன்.இதற்கிடையில் அங்கனமே நான் மூன்று ரவுண்ட்களை முடித்திருந்தேன். அவளோ பீரை கையிலெடுக்காமல் உட்கார்ந்திருந்தாள்.
ஏன் குடிப்பதாயில்லையா எனக்கேட்க, உனக்கு நிறைய கோபம் வருமா என்றாள். நானோ வெகு மந்தகாசப் புன்னகையுடன், கோபம் என்றால் என்னவென்றே தெரியாதென்றும், வாழ்நாளில் நான் திட்டிய ஒரே ஒருவர் என் மானேஜர் தானென்றும் பவ்வியமாகக்கூறிவிட்டு அவளைப்பார்த்தேன். நேற்று வந்தவள் என் கோபத்தைப்பற்றி விசாரிக்கிறாள் என்றால் , நம்மைப்பற்றி மானேஜர் முன்னமே போட்டுக்கொடுத்து விட்டான் என்றுதானே அர்த்தம். அவளோ பீரை ஒரு மிடக்கு விழுங்கிவிட்டு ( இப்போது அவளின் தங்க கழுத்துக்குள் பீர் போவது தெரிவதை நான் தாகத்துடன் கவனித்துக்கொண்டிருந்தேன்) உன்னை ஏன் எல்லோரும் ஹிட்லர் என்றழைக்கிறார்கள் என்றாள்.
இதற்கு என்ன பதில் சொல்வதென என் மூளைக்குள் தேடிப்பார்த்தேன், எதுவும் சிக்காமல் போகவே, லெட் அஸ் செக் டக்கீலா என்றபடி , பேரரை அழைத்து **** என்றேன். இங்கு லெமன் , உப்பை எல்லாம் தர மாட்டார்கள். டக்கீலா மட்டும்தான் நாம் தான் லெமன் உப்பையெல்லாம் தனியாக கேட்டு வாங்கிக்கொள்ள வேண்டும். வந்த வேகத்தில் நான் குடித்து முடித்தேன். அவளோ ஒரு நொடிக்கும் குறைவாக என்னைப்பார்த்தவள், அதே வேகத்தில் ஒரு டக்கீலாக்களை முடித்தாள். அவளின் பாதி குடித்த பீரை எடுத்து அதே வேகத்தில் குடித்து முடிக்க , அவள் வில் ஹாவ் ஒன் மோர் என்றாள். நான் இரண்டு என்றேன். மணி மூன்றரை ஆகியிருந்தது. நாங்கள் இன்னமும் டக்கீலாவில் உட்கார்ந்திருந்தோம். ஆர்டர் செய்த பிரைட் ரைஸ் ஓரமாய் காத்துக்கிடந்தது.
தான் இங்கிலாந்தில் பார்ட் டைம் வேலை செய்து படித்ததாகவும் பள்ளியிலிருந்து காதலித்தவன் வேறொருவளை மணந்து கொண்டதால் மனம் வெறுத்து துபாயில் வேலைப்பார்த்ததாகவும் துபாயின் நெருக்கடிகளில் சிக்கி வேலைப்போய்விட தற்சமயம் ஓமனில் இருப்பதாகவும் கூறினாள். அட வெள்ளைக்காரிக்குமா லவ் பெயிலியர் என்று ஒரு ஆதரவு பார்வையை வீச , அவளோ உனக்கு கேர்ள் பிரண்ட் இருக்காளா? என்றாள். நான் வழக்கமான தலையசைப்பில் இல்லையென்றேன். ஏன் என்றாள் அதைத்தான் நானும் தேடிக்கொண்டிருக்கிறேன் என்றேன்.
என் கணக்கில் ஹாப் பிராந்தியும் , நான்கு டக்கீலாக்களும் அரைக்கப் பீருமாய் போதை பெருகி வழிந்தது. வெள்ளைக்காரி என் நெஞ்சில் சாய்ந்துக்கொண்டிருப்பதாய் நினைத்துக்கொண்டேன், சந்தோசத்தில் இன்னும் கொஞ்சம் போதையேறுவதாய் தோன்றியது.
அவளோ ஏதோ பேசிக்கொண்டிருந்தாள், சிகரெட் பற்ற வைத்து என் முகத்தில் ஊதியபடி கோபத்தில் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். ஒரு வேலை அவளின் காதலனை நினைத்து திட்டிக்கொண்டிருக்கலாம் என்பதாய் பட்டது எனக்கு.
நீ யாருடா எனக்கு ? என்கிற கேள்வியில் சுண்டிப்போனது மனம். நான் யாரென்கிற கேள்விக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் திகைத்து நின்றேன். உன்னை யோசிக்கக்கூட எனக்கு நேரமில்லை. உனக்கு ஏண்டா நான் பதில் சொல்லனும், எங்க போறேன் , யார் கூட பேசுறேன், என்ன பண்றேன்னு ஏன் சொல்லனும். நீ எனக்கான ஒரு அவுட்லெட் அவ்ளோதான் அதைத்தாண்டி எதுவுமில்லை. வேணும்னு தோணினா நான் பேசுவேன். விருப்பமிருந்தா பேசு , இல்லாட்டி விடு. உன்னைத்தேடி , உன்னைப்பற்றி யோசிக்க எனக்கு பிடிக்கல. என்றெல்லாம் பேசிவிட்டு போனவளை நினைத்துக்கொண்டேன்.
என் எதிரில் சிகரெட் பிடித்து என் மூஞ்சியில் ஊதுகிறவளாய் அவள் மாறிப்போனாள். மெல்ல நினைவிழக்கத்துவங்கியது. பெட்ரோல் குழாய்கள், ஜோ, காதல் , மானேஜர், எல்லாம் தாண்டி
”சார் பில்” என்கிற குரல் காதுக்குள் ஒலியெழுப்பி கலைத்துப்போட்டது.
Labels: புனைவு
இன்னும் இன்னுமாய் ஒரு காதல் கதை..,
15 சொல்லிட்டுப்போனவங்க ஆக்கம் கென்., at Wednesday, February 17, 2010
நீலத்தை தவிர ஏதுமற்ற வானத்தில்
ஒற்றை முகமாய் பிரகாசிக்கும்
சுற்றிய நூறு மினுக்கெட்டான்களில்
எட்டிப் பறித்ததெது
பட்டென இருள்கிழித்து மறையும்
ஒற்றைப்பூவின் பெயர் தேடச்செய்து
புவித் தொடாமல் எரிந்து மறைந்ததெது?
எவர் மத்தாப்பின் சிதறல்
ஆகாசம் நிறைக்கிறது
எவர் கனவின் இருள்
மறைந்து ஒளிர்கிறது?
மஸ்கட்டிலிருந்து கடைசியாய் கிளம்புவதற்கான டிக்கெட் கையில் கிடைத்தவுடனேயே பொண்டாட்டிக்கு சொல்வதற்காய் தொலைப்பேச நினைத்தவன், திடிரென முன்னால் நின்றால் எத்தகைய ஆனந்த அதிர்ச்சியை அடைவாள் அவள் என்கிற கற்பனையில் அந்த எண்ணத்தை கைவிட்டேன்.
கிட்டத்தட்ட எட்டு மாத கர்ப்பத்திலிருந்தவளை ஊரில் விட்டு வந்தவன், குழந்தைப்பிறந்த ஒன்பது மாதங்களாகிவிட்டது. தினமுமான தொலைப்பேசி உரையாடல்களில் கடைசியாய் வெடித்து அழுது திட்டி முடிப்பதும், ஒரு வாரத்தில் உன் முன் நிற்பேன் என்கிற வாய்ச்சவடாலுமாய் நாட்களை நகர்த்திக்கொண்டிருந்தேன்.
உன் பொண்ணு,பொண்ணுன்னு போன்ல கொஞ்சுறதை நிறுத்திட்டு இங்க வந்து வச்சுப்பாரு, ஒரே நாள்ள ஓடிப்போயிடுவ. அவ எல்லாரும் தூங்கிறப்போதான் முழிச்சிட்டு விளையாடுறா, அவ முழிச்சுட்டு இருக்கிறப்போ தூங்கினா கத்தி ஊரைக்கூட்டுறா. முன்னேயாவது படுத்துட்டு இருந்தா, இப்போ ஒரு வாரமா எப்படியாவது தட்டு தடுமாறி நடக்க ஆரம்பிச்சிட்டா, டிவி போட்டா பாட்டு இருக்கிற சானலா வைக்கனும் வேற எதைப்பார்க்க நினைச்சாலும் விட மாட்டேன்றா. எங்க படுக்க வச்சாலும் துறு துறுன்னு நகர்ந்துப் போயிடுறா. அவ கூட ஓடி உக்கார்ந்து நடந்து பால்கொடுத்துன்னு ஒரு ஒரு நாளும் என் உயிரே போயிடுது. நீ என்னடான்னா அங்கே உட்கார்ந்துக்கிட்டு, எம்பொண்ணு எம்பொண்ணுன்னு பீத்திக்கிட்டு இருக்கே. பொண்ணு வந்ததிலிருந்து நானும் பார்த்திட்டு தான் இருக்கேன்.மூச்சுக்கு முன்னூறு வாட்டி பொண்ணு பொண்ணுன்னு சொல்றவன் ஒரு நாளிலேயாவது உன் உடம்பு எப்படி இருக்கு, ஒழுங்கா சாப்பிட்டீயானு ஒரு வார்த்தை இல்லை. பொண்ணுக்கு அதைக்கொடுத்தியா இதைக்கொடுத்தியான்னு மட்டும்தான் அக்கறை. நடத்துடா நான் பார்த்துக்கிறேன் என்றெல்லாம் கத்திக்கொண்டிருப்பவளை நினைத்துப்பார்க்கிறேன்.
தேவதைக்கதைகளில் வருகிற வெண்ணிற ஆடையனிந்த சிறகுளுடனான தேவதையை கேட்டதெல்லாம் தருகிற தேவதையை எல்லோருக்குமே வேண்டுமென்கிற உணர்விருக்கும்.அத்தகைய தேவதைதான் இவள், குறையாத கருணை நிறைத்து வைத்தவள். எல்லா வசதிகளின் உச்சத்தில் இருக்கையிலும் அடுத்த வேலையை நோக்கி அலைந்துக்கொண்டிருந்தவனை காதலித்திட்ட கொடுமைக்காய் வீட்டை விட்டு வந்து திருமணம் செய்து கொண்டவள். ஒரு நாள் கூட நான் திட்டியோ , கத்திக்கொண்டிருக்கையிலோ முகம் சுளித்தவளில்லை. எல்லா திட்டுகளுக்கும் மென்சிரிப்பாய் என்னடா முடிஞ்சிட்டா இல்லையா? இதையெல்லாம் விட்டுட்டே என்று எடுத்துக்கொடுப்பாள்.என் கோபமெல்லாம் மறந்துப்போயி அவளை நோக்க, போடா போயி வேலையைப்பாரு எப்பப்பார்த்தாலும் சண்டை ஈவினிங் சீக்கிரமா வா, பீச்சுக்குப்போகலாம் என்பாள். எனக்கோ இருக்கிற எரிச்சலில் எவன்கூடவாவது போடீ, பீச்சுக்கு என்ன ? எங்க வேணா போ என்பேன். போனில் என்ன சொன்னே, என்பாள் அடுத்த கணங்களில் விழும் திட்டுக்களின் எண்ணிக்கை முடிகையில் என் கோபம் மறைந்து அய்யய்யோ மாட்டிக்கிட்டோமே என்கிற எண்ணம்தான் பெரிதாயிருக்கும். சாயங்காலம் வீட்டுக்குப்போனால் லைட், பேன் என்று எதையும் ஆன் பண்ணாமல் உட்கார்ந்திருப்பாள். என்னடி எப்போ வந்தே என்கையில் ஏன் உயிரோட வந்தேன்னு கேளு, உனக்கு நான் சலிச்சுப் போயிட்டேண்டா, அதான் கண்டபடி பேசுற, நான் எவன்கூட வேணா போவேன்னு நினைச்சு தானே அப்படி பேசுற, உன்னை நம்பி என் வீட்டை விட்டு வந்தேண்டா அதான் இப்படி பேசுற என்று கத்தித்தீர்ப்பாள். கொஞ்ச நேர கெஞ்சல்களில் இறங்கிவருகிறவளாயிருக்க மாட்டாள். எல்லா அடம் , அழுகை முடிய நள்ளிரவாகியிருக்கும். கன்னம் தொட்டு, கெஞ்சி நீ இப்படியே இருடி நான் போறேன், ரோட்ல போயிக்கத்துவேன். என் பொண்டாட்டி என்னைக்கொடுமை படுத்துறா, கேட்டுச்சொல்லுங்கன்னு தெருவுல இருக்கிற எவனையாவது கூட்டிட்டி வருவேன் என்கையில், கண்கள் பொங்கும் சிரிப்பை வெளிக்காட்டாமல் போடா நாயே என்பாள். மெல்ல மெல்ல விடியும் எங்களின் கோப வானம்.
பருவத்தில் வந்த காதலாயில்லை, இவள் எல்லாவற்றிலும் மிக தீர்க்கமான முடிவுகளோடும் தீராத அன்போடும் வாழ்பவள். எனக்கோ யோசனைகள் திட்டமிடல்கள் என்கிறவைகளோடு எந்த தொடர்புமிருந்ததில்லை. ஒரு அரைகுறை சராசரிக்கும் , மிகத்தீர்மானங்களுடனான புத்திசாலிக்குமான காதல். என் நண்பர்கள் வட்டாரத்தில் எல்லோரும் பொறாமைத்தீ எரிய சொல்வார்கள், நியூட்டனின் மூன்றாம் விதியோட எடுத்துக்காட்டு நீங்கதாண்டா, ஒரு பக்கம் அழகு, அறிவு , நல்ல வேலை, நிறைய சம்பளம்னு ஒரு பொண்ணு, இன்னொரு பக்கம் மொக்கையான, வாங்கிற சம்பளத்தில படம் போடாத புத்தகங்களையும், பசிக்கிதுன்னு சொல்லி ஏமாத்துறவனுக்கு சாப்பாடும் , கூட பார்சலும் வாங்கித்தர லூசு . எதிரெதிர் துருவங்கள் ஒன்றையொன்று ஈர்க்கும் உண்மைதாண்டா மாப்ளே என்கிறவனின் முகத்தில் கேலியைத்தாண்டிய பொறாமை இருக்கும்.
காதலிக்க ஆரம்பித்த நாட்களில் நான் நண்பர்களோடு வடபழனியில் தங்கியிருந்தேன். கூட இருந்தவர்கள் எல்லோருமே சாப்ட்வேர் ஆசாமிகள். அந்த அறையில் குறைந்த சம்பளத்தில் அதிக செலவாளியாய் நின்றது நான் மட்டும்தானாயிருக்கும். இவளுக்கோ என்னை ஒரே நாளில் கோடீஸ்வரத்தோரணையுடையவனாக ஆக்கிடும் திட்டம் இருந்திருக்க வேண்டும். அங்கிருந்த என் நண்பர்களின் பொறாமையைத் தூண்டி பாருடா நீயும் சராசரி ஆளில்லை என்கிற நம்பிக்கையை எனக்குள் ஊட்ட யோசித்தாளோ என்னமோ, ஒரே வாரத்தில் பதினாறு ஆயிரத்திற்கு சட்டை பேண்ட் என வாங்கிக்கொடுத்திட்டாள். எனக்கோ எதை போடுவது எதை விடுவது எனத்தெரியவில்லை. அவனவன் காலையில் அலுவலகம் போக துவைத்த சட்டை பேண்ட்களுடன் அயர்ன் செய்து கொண்டிருக்க நானோ, புதியதாய் கவரிலிருந்து பிரித்து பின் , அட்டைப்பெட்டியை கசக்கி எறிவேன். இப்படி நிகழ்ந்த மாபெரும் அதிர்ச்சியைத் தாங்க முடியாமல் நண்பர்களின் கூட்டம் பொருமிக்கொண்டிருக்க, ஒரு மாலையில் என்னை அழைத்தவள் இன்னும் பத்து நிமிடத்தில் உன் அறைக்கு வருவேன், உன் நண்பர்க்ள் எல்லோரும் அங்கிருக்க வேண்டும் அதுதான் முக்கியம் என்றாள்.
அது ஒரு ஞாயிறின் மாலை , அவனவன் டீவியின் இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக படத்தில் மூழ்கியிருக்க எனக்கு செல்பேசினாள். நான் மெதுவாக டேய் என் ஆளு வந்திருக்கா, உங்களை எல்லாம் இண்ட்ரீடியூஸ் பண்றேன் என்றேன். எவனும் என்னை சட்டை செய்யாமல் போடா , கனவு காணாதே என்று டீவியில் மூழ்கிப்போனார்கள்.
இவள் வாசல் வந்து கதவைத்தட்டினாள்.
வெகு கம்பீரமாக உள்ளே வந்தவள், என் பக்கத்தில் வந்து ஜோடியாக நின்று கொண்டாள். அவனவனுக்கு வேர்த்து விறுவிறுக்க வழிய ஆரம்பித்தார்கள். நானோ வானுலக தேவனாக இது அவன் , அது இவன் என்று பெயர் அறிமுகங்களைப் பேசிக்கொண்டிருந்தேன். சிறிது நேரம் இருந்தவள் என்னை வந்து பஸ் ஸ்டாப்ல டிராப் பண்ணுடா என்றாள்.
அடுத்த அரை மணிநேரத்தில் திரும்பி வந்தவனுக்கான மரியாதையை நீங்கள் திரைப்படங்களில் மட்டுமே கண்டிருப்பீர்கள்.
ஏண்டி என்னை உனக்குப்பிடித்தது என்கையில் , “ நீ நீயாவே இருந்தேடா, ஒரு கொழந்தை மாதிரி, அடம் , அழுகைன்னும், கோபம் வந்தா எதையும் ஏறெடுத்தும் பார்க்காம வீசியடிக்கிற கொழந்தையா இருந்தே என்பாள்.
அந்த நிமிடத்தில் ஓடிப்போய் அவளின் கன்னத்தைக்கிள்ளி முத்தமிட்டுக்கொள்வேன். அவளின் கைவிரல்களை கோர்த்துக்கொண்டு ஏதாவது பேசிக்கொண்டே இருப்பேன். கல்யாணம் ஆகி இத்தனை மாசமாச்சு. இன்னுமாடா நான் சலிக்கலை உனக்கு. என்னமோ நேத்து கல்யாணம் ஆகினவன் மாதிரி இருக்கேடா நீயென்பாள். உனக்கு சலிச்சிடுச்சாடி என்கையில் ஆமாம், அதான் புதுசா யாரையாவது லவ் பண்ணலாம்னு யோசிக்கிறேன் என்பாள்.
எல்லா சண்டைகளின் முடிவிலும் என்னை யாரும் தொடக்கூடாது என்கிறதுதான் இருவருக்குமான எல்லைக்கோடு. எத்தனை நிமிடங்கள் நீடிக்கும் என்றெல்லாம் யோசிக்கக்கூட முடியாது. இரவு விளக்கின் வெளிச்சத்தில் ஒரு புறமாய் முதுகு காட்டி உறங்குபவளின் அழகு , விடியற்காலையில் என் மார்போடு கட்டிக்கொண்டிருப்பாள். எழுந்து டீ போட்டு வருகையில், சண்டை போடுறான் பொண்டாட்டிக்கிட்டே, இப்போ யாருக்கு நஷ்டமாச்சு என்று கண்ணடிப்பாள்.
கர்ப்பத்தின் ஆரம்ப மாதங்களில் தினமும் வாந்தி , எதை தின்றாலும் வாந்தி நிற்காத வாந்தி. எனக்கோ என்ன செய்வதென எதுவும் தெரியாமல் புலம்பித்தவிப்பேன். இருடா, குழந்தை வேணும்தானே, அப்படிதான் இருக்கும் , நீ பயப்படாமல் இரு என்பாள். பெரிதாகத்துவங்கிய வயிற்றில் எங்கள் குழந்தையின் அசைவுகளை உட்கார்ந்து ஆராய்வதுதான் எங்களின் முழுநேர வேலை. இப்போ பொண்ணு சோம்பல் முறிக்கிறா, என்னடி இன்னும் சாப்பிடலன்னா எட்டி உதைக்கிறா என்கிறதாய் ஏதேதோ சொல்லிக்கொண்டிருப்பாள்.
ஆறு மாத கர்ப்பக்காலத்தில் நானே கர்ப்பத்தை சுமந்தலைவதாய் எண்ணிக்கொள்வேன். அவளை நகர விடாமல் அதை செய்யாதே , இதை செய்யாதே என மிரட்டிக்கொண்டிருப்பேன். பெரிய இவன், புருசன்னு நிருபிக்கிறாராமாம் என்று முகம் கொள்ளா சிரிப்போடு கிண்டல் செய்துக்கொண்டிருப்பாள்.
எட்டாவது மாதத்தின் ஆரம்பத்தில் வேலை பொருளாதார பிரச்சனைகளின் காரணமாய் வெளிநாட்டு வேலையை ஒப்புக்கொள்வதா? பொண்டாட்டி பிரசவம் பக்கத்தில் இருந்து பார்ப்பதா என்கிற மனச்சிக்கலில் குமைந்துப்போகையிலும் அவள்தான் சொன்னாள், போடா போயி பொறக்கப்போற பொண்ணுக்கு நிறைய தங்கம் வாங்கிட்டு வாடா, நான் பார்த்துக்கிறேன் நீ கவலைப்படாமல் போடா என்று அனுப்பி வைத்தாள். காலத்தின் சுழற்சியில் குழந்தைப் பிறந்த நாளில் நான் அலுவலகத்தில் குறுக்கும் நெடுக்குமாய் வெறிப்பிடித்து அலைந்து கொண்டிருந்தேன்.
இறங்கத்துவங்கியது விமானம், சென்னை அதிகாலையில் பனிமூட்டமாய் மூடிக்கிடக்க, சரெலென்ற பாய்ச்சலில் வந்திட்டது சென்னை.எல்லோருக்கும் முன்னால் மனம் ஓடத்துவங்க, வேகமாய் நடைப்போடத் துவங்கினேன்.நீண்ட குடியுரிமை வரிசையில் அவனைப்பார்த்தேன். எக்கச்சக்க டியூட்டி ப்ரீ பைகளுடன் வெகுத்துடிப்பாய் முன்னேற பிரயத்தனப்பட்டிக்கொண்டிருந்தான். கண்களில் உறக்கம் தாண்டியும் உற்சாக வெள்ளமடித்தது.
எல்லாம் முடிந்து வாசலை வந்தடைந்தவன், மெதுவாய் நினைவுக்குக்கொண்டு வந்தேன். நான் படித்த கதையின் நாயகன் பொண்டாட்டியைத்தேடி வீட்டிற்கு ஓடிக்கொண்டிருக்கிறான். சென்னையின் பரபரப்பு என்னை ஏதோ செய்தது. அவள் இன்னேரம் கணவனின் அன்பில் கரைந்திருப்பாள் , அவன் தன் குழந்தையைக் கொஞ்சி களைத்திருப்பான். என்னை தாண்டி கடந்தப்போன அந்த ஆளை பார்த்தேன்.
மெதுவாய் எரிச்சலுற்று , செல்போனில் நண்பனை தொடர்புக்கொண்டேன், அவனின் மொபைல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பக்கத்திலிருந்த ஒரு பெண்ணை வெறிக்கத்துவங்கினேன். சற்று நேரத்திற்கு பின்னான முயற்சியிலும் சுவிட்ச் ஆப் என்றது போன்.
Labels: புனைவு

எட்டாம் வகுப்பின் அரையாண்டுத் தேர்வுக்கு முந்தைய டியூசன் வகுப்புகளில் வெகுத்தீவிரமாக படிப்பதாக பாவனைக்கொண்டிருந்தேன். காலாண்டில் வாங்கிய மதிப்பெண்களை விட கொஞ்சமாவது கூடுதலாய் எடுத்து வீட்டில் கெளரவத்தை நிலை நாட்டிடுவது என்பது மிகப்பெரிய குறிக்கோள். முதல் ஐந்து ரேங்க்களுக்குள் வந்தால் சைக்கிள் வாங்கித்தர சொல்லி கேட்கப்போவதாய் சொல்லிக்கொண்டிருப்பவனை பார்த்துக்கொண்டிருந்தேன்.
எப்போதும் டீயுசன் ஆரம்பிக்கும் முன் அங்கிருக்கும் பெண்கள் நன்றாய் படிக்கிற மாணவர்களிடம் மட்டும் நோட் வாங்கி சந்தேகங்களைக் கேட்டு பேசிக்கொள்வார்கள். பொண்ணுங்களிடம் பேசுவதே பெரிய சாதனையாய் பார்க்கப்பட்ட அந்தக்காலத்தில் என்னிடம் பேசுவதற்கு கூட எவளும் இருந்ததில்லை. நித்யாவைத்தவிர
வெகு திருத்தமான வட்ட முகம் , எப்போதுமே ஒரு நிமிடத்திற்கு முன் தான் குளித்திட்டு வந்தாளோ என்கிற எண்ணம் தோன்ற செய்யும் சுத்தம். மெல்லிய சந்தனக்கீற்று நெற்றியில், கண்களுக்குள்ளாய் சிரிப்பும் , ஒழுங்கான பல்வரிசையுமாய் இருப்பாள். அப்போது குறுக்கெழுத்துப்போட்டிக்கு வரும் கூப்பன்களை கத்தரித்து எடுத்து வருவாள். சரியான பதில் எழுதி அனுப்பும் வாசகர்களுக்கு நூறு ரூபாய் பரிசளிக்கப்படும் , ஒன்றிற்கு மேலானவர்கள் சரியான பதில் எழுதியிருந்தால் பகிர்ந்தளிக்கப்படும் என்கிற அதன் வாசகங்களைப்பார்க்கையில் எனக்கு சிரிப்பாய் இருக்கும். அப்போது இருந்த என் அரைகுறை அறிவில் அவள் குறுக்கெழுத்தை நிரப்ப உதவுவேன்.
வெகு மெல்லியக்குரலில் என்னிடம் பேசுவாள், ஏன் எப்பவும் கோவமா இருக்கே, உங்க வீட்டுல இருக்கிற அடுக்கு செவ்வந்தி எடுத்துட்டு வந்து தான்னா ஏன் தர மாட்டேன்ற? உனக்கு ஏன் கெட்ட வார்த்தையாய் வருது என்கிற கேள்விகள் தினம் தவறாமல் இடம்பெறும். அவனவன் இருக்கிற மொக்கைப்பெண்களுக்கே டிசம்பர் பூ அதுவும் கட்டி எடுத்து வந்து தருவார்கள், இல்லாவிட்டால் மல்லிகைக்கொல்லைக்கு போய் அரும்பாய் வாங்கி வாழையிலையில் கட்டி எடுத்து வந்து தருவார்கள். என் வீட்டில் அப்போது நிறைய பூச்செடிகளின் விதைகளை சர்ச்சிலிருந்து எடுத்து வந்து வளர்த்து வந்தேன். வயலுக்குப்போட அப்பா வாங்கிப்போகும் யூரியாவை வெகு சிறிது எடுத்து நீரில் கரைத்து அம்மா உரமிடுவதால் எந்த செடியும் செத்துப்போகாது. அத்தனைப்பூக்கும் பூக்களில் அம்மா ஒன்றையும் பறித்து வைத்துக்கொள்ள மாட்டாள். எப்போதாவது எங்கேனும் மாயவரத்துக்கோ, காரைக்காலுக்கோ போய்விட்டு வந்தால் மரிக்கொழுந்து ஒரு கொத்து அப்பா வாங்கி வருவார், அதிலேயும் பாதியை தலையில் சொருகிக்கொண்டு மீதியை தேங்காயெண்ணெய் பாட்டிலில் போட்டு வைப்பாள். எனக்கும் பூ பறித்துக்கொடுப்பதில் தயக்கம் ஒன்றுமில்லை. அம்மா ஆயிரம் கேள்வி கேட்பாள் அதுவுமில்லாமல் பசங்களிடம் வீறாப்பாய் பலநாள்கள் பேசி அவர்கள் பூக்கொடுத்து வழிவதையே சாகிற அளவுக்கு பேசியவன் என்பதால் தன்மானத்தைக்காக்கும் பொருட்டு பொறுத்துக்கொண்டிருந்தேன்.
நித்யா அப்போதுதான் சமைக்க கற்றுக்கொண்டிருந்தாள், டியூசன் ஆரம்பிக்கும் முன் எதையாவது ஒளித்து எடுத்து வந்து தருவாள். ஏதாவது அடை, அதிரசம், முறுக்கு , எள்ளுருண்டை , சில நேரங்களில் சீனி லட்டு என்று கிராமத்தில் அரிதாய் விசேசங்களுக்கு மட்டுமே கிடைக்கிற பட்சணங்களாயிருக்கும். எது கொடுத்தாலும் தேவையில்லை, இதெல்லாம் கொடுத்து என்னை அசிங்கப்படுத்தாதே என்றெல்லாம் பிகு பண்ணினாலும் கடைசியாய் டியூசன் சார் வருவதற்கு முன்னால் வாங்கி வாயில் போட்டுக் கரைத்து முடிப்பேன்.
அவள் வீட்டில் இருப்பவர்கள் என்னை ரோட்டில் பார்த்தால் டேய் பாத்திமா மொவந்தானே நீ, ஒம்மாட்ட சொல்லி பூசணிப்பிஞ்சு தொக்குப்பதத்துக்கு கேட்டேன்னு சொல்லு என்பார்கள். வயலும் விவசாயமுமாய் இருப்பதால் அம்மா கத்திரி , வெண்டைச்செடிகளும் கூடவே பரங்கி, பூசணியும் கோடையில் வெள்ளரியும் பயிர் செய்திருப்பாள் எப்போதும். அவள் பாட்டுக்கு செடி கொடி ஆடு மாடுன்னு எல்லாவற்றுக்கூடவும் எப்போதும் பேசிக்கொண்டிருப்பாள். எவ்ளோ விளைந்தாலும் கேட்கிறவர்களுக்குக் கொடுத்து விட்டு மீதத்தை வீட்டின் சமையலுக்காய் கொண்டு வருவாள். நேரம் கழித்து வருகிற நாட்களில் ரசமும் , முருங்கைக்கீரையும் இருக்கும். வீட்டு வாசலில் இருக்கிற முருங்கை மரத்தை வெட்டி ஆற்றில் எரிய நிறைய நாள் யோசித்திருக்கிறேன். அம்மா வைக்கிற ரசத்தின் ருசி அலாதியானது . அவரவர் அம்மாக்களின் கைப்பக்குவம் அப்படிதான் இருக்குமோ என்னமோ.
அம்மாவுக்கு எப்போதும் என் மேல் பாசம் இருப்பதற்கான சுவடுகளையே நான் கண்டதில்லை. எனக்கு கோபம் வந்திட்டால் வீட்டில் இருக்கும் ஆடு மாடுகளை விரட்டி அடித்திடுவது, தென்னை மரத்திலேறி இருக்கிற இளநீர் குரும்பை வரைக்கும் பிடுங்கிப்போடுவது. இல்லாவிட்டால் உன் அண்ணன் தம்பி எல்லோரும் திருட்டுப்பயல்கள் எங்க நைனா வாங்கினக் கொல்லையை பங்குப்போட்டுட்டாங்கன்னு சொல்வது , தங்கச்சியை தலையில் கொட்டி அழ விடுவது என்கிற எல்லா கொடூரத்தனங்களுக்கும் தீராமல் அவள் ஆசையாய் வளர்த்திருக்கும் செடிகளை வேரோடுப் பிடிங்கி எறிவது வரை செய்வேன்.
அம்மாவுக்கு கோபத்தில் தலைக்கால் தெரியாது , விளக்கு மாறு , செருப்பு என கிடைத்ததையெல்லாம் எடுத்து அடிப்பாள். கையில் மாட்டிக்கொள்ளாமல் ஓடி ஓடி எரிச்சலூட்டுவேன். அரை செங்கல்லை எடுத்து வீட்டின் கதவில் அடிப்பேன். வீட்ல அடங்காதவன் , ஊர்ல அடிப்பட்டுதாண்டா சாவான், என் வாசாக்கு வாங்கதடா , நாசமாப்போயி நடுத்தெருவிலெ நிப்பேடா என்பாள். ஊரில இருக்கிற கிழடு கட்டைங்க எல்லாம் பஞ்சாயத்து செய்வார்கள். ஏண்டா இப்படி பண்றே, வய ஆடு மாடுன்னு கஷ்டப்பட்டு படிக்க வைக்கிற திமிர்டா உனக்கெல்லாம் , உன்னையெல்லாம் சட்டித் தூக்க வைச்சு சம்பாதிக்கிற காசுல சாப்பிடனும்டா அவ என்கிறவர்களை வெகு திருத்தமாக உன் வேலை மயிரப்பாத்திட்டு போறீயா , இல்லை அரைக்கல்லால அடிக்கட்டுமா எனக்கேட்டபடி அனாயசமாக அவர்களின் காலடியில் பட்டுத்தெறிக்கிற வகையில் செங்கற்களால் அடிப்பேன். தலையில் அடித்துக்கொண்டு போய்விடுவார்கள். எல்லா கூத்தும் என் அப்பா வருகிற வரைக்கும்தான். அவர் வந்தப்பின்னால் அம்மா ஒரு பெரிய ஒப்பாரி வைத்து அழுவாள்.
அவ்ளோதான் அவர் வெளியில் வந்து கையில் சிக்குவேனா என்கிற பார்வையைப்பார்ப்பார். சிறிது நேரத்தில் வீட்டில் வெளிக்கதவு பூட்டப்படும் , நான் கோபத்திலும் கெளரவத்திலும் ரோட்டில் தூரமாய் உட்கார்ந்திருப்பேன். சண்டை வழக்கமாய் இரவு டியூசன் விட்டு வந்தவுடனே ஆரம்பித்து முடியும். ஒன்பது பத்து மணி ஆனப்பின்னே, ஊரில் நடமாட்டங்கள் குறையும் ஆங்காங்கே நாய் ஊளையிடும், பேய்களின் நடமாட்டம் நாய்களுக்கு மட்டும்தான் தெரியும் என்று சொன்னக்கதைகள் அச்சத்தைத்தரும். பசி வயிற்றைப்பிசையும். அச்சமும் அவமானமாய் போய் வீட்டுக்கதவை தட்டினால் திறக்கவே மாட்டாள் அம்மா. அப்பா இடையிடையே பனியில சாப்பிடாம கிடக்கிறான் , தொலைஞ்சிப்போறான் தொறந்து விடு என்கிற குரல் கேட்கும். புள்ளன்னா கண்டிச்சு வளக்கலன்னா நடுரோட்ல சீரழிவான் உன் புள்ள எனத்திட்டி அதை மறுத்திடுவாள் அம்மா.
இவ்வளவு நேரம் இருந்த கோபம் , தன்மானம் எல்லாம் போயி அம்மா பசிக்குதும்மா, பயமா இருக்கும்மா கதவைத்தொற என தட்ட ஆரம்பிப்பேன். அம்மாவோ நான் பேசிய எல்லாவற்றையும் மறு ஒளிப்பரப்பு செய்வாள். இவ்ளோ பேசினானா அப்போ தொறக்காத அங்கேயே கிடந்து சாகட்டும் என்பார் அப்பா.
எத்தனை நேரம் கத்தினாலும் கதவு திறக்கிற வழியைக்காணோம் என்கிற கடுப்பில் வாசல் தரையில் படுப்பேன். மார்கழி குளிரும் , மண் தரையின் ஜில்லிப்புமாய் பசியின் கொடுமையில் சுத்தமாய் தூக்கம் வராது. வீட்டில் இருக்கும் நாய்களோ வேகமாய் வெளியில் ஓடுவது குரைப்புதும் திரும்பி அதே வேகத்தில் ஓடி வருவதுமாய் பயமுறுத்திக்கொண்டிருக்கும்.
எல்லாம் முடிந்து எப்போது உறங்கினோம் எனத்தெரியாமல் மழைப்பொழிகிறதோ என்கிற ஈரத்தின் தெறிப்பில் எழுகையில் அம்மா கோபமடங்காமல் சாணிக்கரைத்து வாசலுக்குப்போட்டுக்கொண்டிருப்பாள். ஒரு வார்த்தைக்கூட பேச மாட்டாள். அம்மா அம்மா இனிமே சண்டைப்போட மாட்டேன் என்று கதறினாலும் பேசமாட்டாள். அப்பா நாலு மணிக்கெல்லாம் வயலுக்குப்போயிருப்பார். பாதி நாட்களில் என்மேல் போர்த்திக்கிடக்கும் அவரது வேட்டியோ துண்டோ அவர் காலையில் போகிற அவசரத்தில் போர்த்தி விட்டுப்போனதாயிருக்கும்.
அம்மாவோ அவள்பாட்டுக்கு வீட்டினுள் எறிந்த கற்களை சுத்தம் செய்வாள்,பிடிங்கி எறிந்த செடிகளை நட்டு வைப்பாள். செடிகளை பார்க்கையில் வேதனையில் முகம் நெரிக்க அதுவும் உயிர்தானேடா உன்னை என்னப்பண்ணிச்சு என்பாள் வெகு ஆத்திரத்துடன். வீட்டை தொறந்து வைக்க முடியல கண்ட நாயும் உள்ளே புகுந்திடுது என சாடைப்பேசுவாள். டீ டம்ளரை நங்கென்று தரையில் வைத்துப்போவாள், பசி ஒரு பக்கம் என்றாலும் கோபமும் சுயகெளரவமும் டீயை தொடுவதற்கு இடம்தராது. தங்கையோ திகிலுடன் பார்த்துக்கொண்டிருப்பாள் . நெருங்காமல் ஒரு தூரத்தை கணக்காய் வைத்துக்கொண்டிருப்பாள். அடிக்க ஆரம்பிக்குமுன் அழுது அம்மாவைக்கூப்பிடும் வித்தை அவளுக்குத் தெரியும் மிக நன்றாய்.
காலையில் ஆற்றில் குதித்து நீந்திக்களைத்து பள்ளிக்குப்போகும் அவசரத்தில் வருகையில் பசி மட்டும்தான் இருக்கும். திட்டு கோபம் ஆத்திரம் எல்லாம் மறந்துப்போகும். நீர் விட்ட சோற்றில் தயிரைப்பிசைந்து பசி தீர கட்டி விட்டப்பின் தான் உலகம் சிறு மங்கலாய்த் தெரியும். சைக்கிளில் பெல் அடித்துப்போகிற நண்பர்களைப் பொறாமையில் பார்த்தபடி டிஎல் போயிட்டான்னே என்றோ டில் போயிடுச்சுடா என்றபடியோ ஓட்டமாய் ஓடுவதுதான் தினமும் நடக்கும். டிஎல் என்பது தனலெட்சுமி என்கிற நாகை – மயிலாடுதுறைப்பேருந்து. எங்கள் ஊரை அது ஒன்பது முப்பதுக்கு கிராஸ் செய்யும். முதல் மணி ஒன்பது முப்பதுக்கு அடிக்கும் அதற்கு முன் பள்ளிக்கு செல்லவில்லை என்றால் கிரவுண்டில் முட்டிப்போட வேண்டியிருக்கும் என்பதால் அந்த பரபரப்பு.
அம்மாவிடம் வாங்கியத்திட்டுக்களை கோபத்தைக் காட்ட நித்யா இருந்தாள். அவள் எதைக்கேட்டாலும் வேலை மயிரப்பாரு என்கிற ஒற்றை வார்த்தையில் அழ வைப்பேன். உன் கையில தானே நான் பேசுறேன், என்னை ஏன் இப்படி திட்ற என்கையில் கண்கள் சிவந்து அருவியாய் அழுகைக்கொட்டும். கூட இருக்கும் கொடுக்குகள் எல்லாம் நீ செத்துப்போயிட்டா ஒரு நாளு லீவாவது கிடைக்கும் என்று சாபமிடுவார்கள். உங்களை எல்லாம் கொன்னா கூட லீவு கிடைக்கும் என்பேன். மகமாயி கோயில்ல மண்ணள்ளி வச்சுடுவேன் என்பாள் குட்டி வள்ளி. அந்தப் பக்கம் வா உன்னை ஆத்துல தள்ளிக்கொல்றேன் என்பேன். இரு பீரியட்கள் முடிந்தப்பின்னே, பத்து நிமிட இடைவெளி . அப்போது திரும்பவும் வருவாள் நித்யா, இந்த முறை சாப்பிட எதையாவது வைத்துக்கொண்டு. பெரும்பாலும் வாழைப்பழங்களாயிருக்கும் அல்லது வெகு சொற்ப மாங்காய் பத்தைகள். நான் பாட்டுக்கு கண்டுக்காமல் இருப்பேன், என் பெஞ்சின் வெகு அருகில் வந்து நீ இனிமே சண்டைப்போட்டே நான் பேசவே மாட்டேன் என்றபடி வைத்துவிட்டு போயிடுவாள்.
எட்டாம் வகுப்பின் அரையாண்டு விடுமுறைக்குப்பின்னால் பள்ளிக்கு வந்த நித்யா அரைச்சட்டையிலிருந்து தாவணி போட்டிருந்தாள். வெட்கமும் கோணலுமாய் அவ வயசுக்கு வந்திட்டாடோய் என்கிற என் நண்பர்களின் கேலிக்கூச்சல்கள் என்னுள் எதிரொலித்தது. இனிமே பேச மாட்டாடா அவ பெரிய பொண்ணாகிட்டா என்கிற வைத்தெரிச்சல்களாய் இருந்தது.
டியூசன் போனபோது வழக்கமாய் என்னருகில் உட்காருபவள், வேறு ஒரு பெண்ணுக்குப் பின்னால் உட்கார்ந்து கொண்டாள். என் முகத்தை பார்ப்பதை முடிந்த மட்டும் தவிர்த்தாள். எனக்கோ என்ன **** வயசுக்கு வந்திட்டா , பேசக்கூட மாட்டேன்றா , பெரிய புடுங்கியாகிட்டா என்று வண்டையாய் வந்து கொண்டிருந்தது.
டியூசன் முடிகிற வரைக்கும் என்னால் அங்கு உட்கார்ந்திருக்க முடியவில்லை. முடிந்து வெளியில் வந்தவுடன் அவரவர் சைக்கிள் எடுத்துக்கொண்டு பெல்லை கண்டபடி அடித்துப்பறந்து போனார்கள். நான் மெதுவாக நடக்கத்துவங்கினேன், என்னுடன் என் தெருப்பயல்கள் இருவரும் ஒரு பொண்ணும் நடந்து வந்தார்கள். எனக்குப்பின்னால் நடந்து வந்த நித்யா திடிரென வேகமாய் வந்து என் கையைப்பிடித்து எதையோ திணித்து விட்டு ஓடி விட்டாள்.
வெளிச்சத்தில் பார்க்கையில் ஒரு சிறு கோடு போட்ட பேப்பரில் பென்சிலால் “நாளைக்கு எனக்கு அடுக்கு செவ்வந்தி பூ எடுத்துட்டு வா:” , நித்யா என்றிருந்தது.
Labels: புனைவு