நீங்கள் தற்கொலை செய்துக்கொள்ள சில யோசனைகள் அல்லது கடும் கோடைக்காதல் காலம்

அவள்
உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறாள்
நீங்கள் பிரியத்தின் வெவ்வேறு வடிவங்களை உணர்த்திக் கொண்டிருக்கிறீர்கள்
அவள்
தன் துக்கங்களை பகிர்ந்து
புதிர்களுக்கான முடிச்சுகளை காட்டுகிறாள்
நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்
அவளை அவளாகவே
உங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறாள்
சிரிப்பதாக பாவித்த நீங்கள்
ஒரு பனிநனைத்த அதிகாலையில்
அவளின் படத்தை பார்த்து கதறியழுதீர்கள்
பிறகு
தனித்த பயணத்தில்
சூரியன் முகத்தில் விழும் கணத்தில்
அழுது தீர்த்தீர்கள்
நாட்கள் கழிய
உங்களை பிடிக்கும் என்கிறாள்
சொற்களை
உங்களோடு புதைத்து
கொஞ்சமாகச் சிரிக்கிறீர்கள்
நேற்றுமில்லாத இன்றுமில்லாத
தருணத்தில்
உங்களின் அழகின்மையை பட்டியலிட்டு
நீங்கள்
கட்டியிருந்த
ஆளுமையை
சிதைக்கிறாள்
உங்களின் துக்கத்தை அறிந்தவளாய்
தான்
சொன்னவை எதுவும் பொருளற்றவை
தன்
சிக்கல்களின் வெற்று பிம்பங்கள் என்கிறாள்
நீங்கள்
நிராகரிக்க எதுவுமில்லை
உண்மையின் வெம்மையில் கசங்கத் துவங்குகிறீர்கள்
இந்தத் தார்ச்சாலையின் மதிய வெயிலில்
வாகனத்தில் நசுங்குவது கூட
உங்களுக்கு
ஆசுவாசம் தரக்கூடும்
கண்ணீரில் கரையத் துவங்கும்
உங்களைப் பார்த்து செருப்புத் தைப்பவன்
வருத்தப்பட்டிருக்கலாம்
உங்களுக்கு அடுத்தவரின் கருணை தேவையில்லை
உங்களின் துக்கம் உங்களுக்கானது
இந்தக் கண்ணீருக்கான அர்த்தம் முடிவற்றது
உறங்கச் செல்கிறீர்கள்
இரவின் வெறுமை உங்களை விழிக்கச் செய்கிறது.
அருகில் கிடக்கிறது ஒரு நைலான் கயிறு.
நன்றி :வா.மணிகண்டன் (http://pesalaam.blogspot.com/2009/02/blog-post_05.html)
வார விடுமுறை நாளின் எல்லா கொண்டாட்டங்களையும் முடித்து விட்டு அறைக்கு திரும்புகையில் விடியற்காலை மணி மூன்று ஆகியிருந்தது. உறங்கத்துவங்கிய அடுத்த அரை மணி நேரங்களில் செல்போன் தொடர்ச்சியாக ஒலிக்கத்துவங்கியது. பாதி தூக்கம் பாதி விழிப்பு என்கிற நிலையில் வரிசையாக போதை அழுகுரல்கள் அழைத்துக்கொல்லத்துவங்கவே செல்போனை சைலண்ட் மோடிற்கு மாத்தி தூக்கியெறிந்து விட்டு உறங்கத்துவங்கினேன்.
விடியற்காலையில் 12 மணிக்கு எழுந்த போது கண்களும் தலையும் உருளத்துவங்கியது. மெல்ல குளியல் கொடுமைகளை முடுத்துவிட்டு ( இப்போது மஸ்கட்டில் 45 டிகிரிக்கு மேல் வெப்ப நிலையிருப்பதால் இரவு பகல் எந்நேரமும் தண்ணீர் கொதிநிலையிலேயே இருக்கிறது) அறைக்கு திரும்பிய போது என் மொபைல் தரையில் கிடந்தது.
எடுத்து பார்த்து அதிர்ந்து போனேன், 16 மிஸ்ட் கால்களும் ஒரே ஒரு மெசேஜும் இருந்தது. அவசரமாக மெசேஜை படிக்கையில் IM DYING NOW என்ற ஒரே ஒரு வாசகம் ஏதோ ஒரு புது எண்ணில் இருந்து வந்திருந்தது. எனக்கோ ஒன்றும் புரியவில்லை. திரும்ப தொடர்பு கொள்ள முயன்ற போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து வெறிப்பிடித்தாற் போல் டயல் செய்துக்கொண்டிருந்தேன். பசி உயிரை எடுக்க ஆரம்பித்திருந்தது. முந்தின நாளின் சந்தோசக்கொண்டாட்டங்கள் அடங்கி வெறியேறத்துவங்கியது.
என்னிடம் இருந்த எண்களுக்கெல்லாம் தொடர்பு கொண்டு கேட்டபோது எவருக்கும் எதுவும் தெரிந்திருக்கவில்லை.
மூளையைக்கசக்கி யோசித்தபடியிருந்ததில் மணி மாலை ஐந்தை எட்டியிருந்தது.பசி, எரிச்சல் , குழப்பம் என முழுவதுமாய் ஒரு நாள் போயிருந்தது. தெரிந்த நண்பர்கள் முந்தின தின பார்ட்டியில் அழுதவனின் முகம், காதல் தோல்வி பற்றி பேசியவர்கள் என எல்லோரையும் யோசித்துக்கொண்டிருந்தேன்.
என்ன வகையான உணர்வென யோசிக்க முடியாதபடி மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது, முடிவில் எவன் செத்தா என்ன , இதுவரைக்கும் எவனும் எதுவும் சொல்லவில்லை. போய் டீ சாப்பிடலாம் என்பதாய் அறையை விட்டு கீழிறங்கத்துவங்கினேன்.
உனக்கும் எனக்குமான காதலும் , காமமும் ஏன் இவ்வளவு தீவிரமாயிருக்கிறது. நீ ஒரு மிருகத்தனமானவன். உன் வேகமும் வேட்கையும், காமமும் காதலும் நான் இதுவரையில் கண்டறியாதது. என் ஒழுக்க விதிகள் உன் முன் பறந்தோடிவிடுகிறது. உனக்கு முன்னால் எனக்கு நிர்வாணம் என்பது ஆடையாய் மாறி நீண்ட நாட்களாகி விட்டது. எனக்கான ஆண் நீதான். எனக்கான காதல் , காமம் தந்தவன்/ தரப்போகிறவனும் நீதான். உன்னிடம் ஏதோ ஒன்று என்னை உன்னோட வெறிப்பிடித்து ஆட வைக்கிறது, பெண் என்கிற கட்டுப்பாடுகள், தயக்கங்கள் எதுவும் எனக்காய் இல்லை. உன் எல்லா கோபங்களும் என்னுள் கிளர்ச்சியை உண்டாக்கிடுகிறதே தவிர வேறதையும் இல்லை.
வேறு எந்த ஆணுடனுமான என் நட்பைக்கூட நீ சந்தேகிக்கிறாய், சண்டை போடுகிறாய். எனக்கான அடிப்படையான உணர்வுகளை கொச்சைப்படுத்துகிறாய் ஆனாலும் நீதான் வேண்டும் நீ மட்டும்தான் வேண்டும் எனக்கு இதை என்னால் மாற்றிக்கொள்ள இயலவில்லை. எனக்காய் சொல்லப்பட்ட வார்த்தைகள் வார்த்தைகள் நெளி நெளியாய் பாம்பென மண்டையோட்டை கொத்தி கொல்லும் வார்த்தைகள் வார்த்தைகள் வார்த்தைகள்..,
மூன்றாவது ரவுண்டுக்குப்பின்னால் அவன் அழத்துவங்கினான். தன் காதலியின் காதல் கடிதங்களை உறக்கப்படித்துக்காட்ட துவங்கினவனை நான் சமாதானப்படுத்தும் விதத்தில் என் காதல் தோற்றதை கூறத்துவங்கினேன். எதையும் காதில் கேட்டுக்கொள்ளாதவன், உனக்கு எதுவும் தெரியாது. நீ ஒரு முட்டாள் , உனக்கான உலகம் உன்னைப்போல பைத்தியக்காரத்தனமானது. உன்னால் எந்த ஒரு பெண்ணையும் சந்தோசப்படுத்த முடியாது. உன் கனவுகள் முட்டாள்தனமானது என்றெல்லாம் உணர்ச்சி வசப்பட்டு கத்தத்துவங்கியவன் என் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.
என்னை உனக்குப்பிடிக்குமாடா? எவ்வளவு பிடிக்கும் என்கையில் என்ன சொல்வதென்ற குழப்பத்தில் பார்த்துக்கொண்டிருந்தவன் ”மயிறு உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் எவ்வளவு என்றால் என்ன சொல்றது” என்றேன். மிக மெதுவாய் நெருங்கி அமர்ந்தவள் என் கை விரல்களை பிடித்து தன் விரல்களோடு பின்னிக்கொண்டாள். எனக்கு ஒரு முத்தம் கொடு என்றவளை பதட்டத்துடன் பார்க்கத்துவங்கினேன்.
நடுங்க துவங்கிய உடலோடு அக்கம் பக்கம் பார்க்கையில் எல்லா காதலர்களும் உலகை மறந்த நிலையில் இருப்பது கண்ணில் பட்டது. வெளிச்சம் சுழலத்துவங்கிய நேரத்தில் அவளை பார்க்கையில் எனக்கு கண்கள் இருளத்துவங்கின. உதடுகள் நடுங்க மிக அருகில் நெருங்கினேன். வேர்த்து விறுவிறுத்து நடுங்கி முத்தமிட முயற்சிக்கையில் உதடுகள் அவளின் மூக்கில் முட்டி எங்கோ போனது.
ஏழு கழுதை வயசாச்சு ஒரு முத்தம் கொடுக்க தெரியலை , கோபம் மட்டும் வருது எல்லாத்துக்கும் , போடா என்றவளை பரிதாபமாக பார்த்தபடி , இல்லடி இரு இந்த முறை ஒழுங்கா கொடுத்திடுறேன் என்று கெஞ்சி ஒரு வழியாக மீண்டும் நடுங்கி வழிந்து உதடு எல்லாம் வெளிறி கன்னத்தில் பட்டும் படாமல் கொடுத்து விட்டு பார்த்தியா கொடுத்திட்டேன் என்று பீற்றிக்கொள்ள
தூ உன் மூஞ்சி , லவ் பண்றவளுக்கு உதட்டில முத்தம் கொடுக்கனும்னு கூட தெரியல உன்னை எல்லாம் காதலிச்சு நான் என்ன பண்ண போறேன்னோ என்று தலையில அடித்துக்கொண்டவளை பரிதாபமாக பார்க்கத்துவங்கினேன்.
டீக்கடையில் இருந்து திரும்பிய பின்னால் செல்பேசியில் மீண்டும் அந்த எண்ணை தொடர்பு கொண்டேன், இப்போது எண் அடுத்த முனையில் ஒலிக்கத்துவங்கியது. எவரும் எடுக்காமல் போகவே மீண்டும் மீண்டும் தொடர்பு கொண்டிருந்தேன்.
எடுத்துப்பேச துவங்கியதும் எனக்குள் அட அப்போ இவன் இன்னும் சாகலையா என்றொரு எண்ணம் வேகமாக கிளை விரித்தாடத்துவங்கியது. மிக மெதுவாக என்ன ஆச்சு எனக்கேட்கத்துவங்கினேன். காதலியின் பாரமுகம் , அவளின் நிச்சயதார்த்தம் என ஏதோ பேசத்துவங்கியவனை மறித்து சரக்கடிக்கலாம் வாடா சீக்கிரம் என்றவாறு மொபலை சுவற்றில் அடித்து உடைத்தேன்.
நான்கு துண்டங்களாக சிதறிக்கிடந்தது என் காதல் அவன் காதல் மற்றும் எல்லா காதலும்
( தற்கொலை செய்துக்கொள்ள போவதாய் எப்போதும் சொல்லிக்கொண்டிருக்கும் தூரத்து நண்பனுக்கு )

