Saturday, September 26

தேவதையின் மீன் தொட்டி

தங்க நிற மீன்களை கண்ணாடிக்குளத்தில்

சுமந்தலைகிறாள் சஹானா

அலையடிக்காத அதன் கரைகளில்

மோதி உடைகின்றன நீர்க்குமிழிகள்

உள்ளுக்குள் வேர்விட்ட மரம்

கிளைவெடித்து குளம் நிறைக்கிறது

சுற்றும் சக்கரத்தின் முனைகளில்

பெருக்கெடுக்கின்றன

நதியோடு எதிர்முனைப்பில் நீந்தியக்காலங்கள்

கடலாகிறது குடுவை நதியாடுகின்றன மீன்கள்

வீசியெறியும் உணவின் ஈர்ப்பில்

கரையுடைக்கின்றன

கரங்களை உயர்த்தி ரட்சிப்பின்

மீட்சியை அவற்றுக்கும் தருகிறாள் சஹானா

Wednesday, September 23

கவிதைத்தொகுப்பு வெளியிடுதல்

விற்கப்பட்ட உடலின் விலை
என்பதாய் குறிப்பிடப்பட்ட கவிதைத்தொகுப்பை
கொடுத்தவன் அல்லது கொடுத்தவள்
என்னைப்பற்றியும் எழுதியிருப்பதாய் சொல்லிப்போனார்கள்
முதல் பக்கத்தின் தலைப்பிலிருந்து தேடத்துவங்கினேன்
முன்னுரையிலும் இல்லாமல் போகவே
நன்றி மறந்திருக்கலாம் என்பதால்
பக்க எண்களின் ஓரத்தில்
அட்டையின் கடைசிப்பக்கத்திலாவது
எங்கும் காணாததால் சற்றுக்குழம்பி போனேன்.
இப்போது தெளிவானது
இது விற்கப்பட்ட உடலுக்கான விலை
அச்சிடப்பட்ட வார்த்தைகள் உதிர்ந்து கொட்ட
வெற்றுப் பக்கமெங்கும் நெளிகிறது
சொல்லப்படாத வார்த்தைகள்

Tuesday, September 22

கடவுளாதல்

பெருங்காம முடிச்சொன்றின் இலகுவில்
அவிழாத தருணமானது
இரவுக்கூகையின் கண்களாகிறது
சப்தங்களை மட்டும் உள்ளீடாகும்
உடல்களின் தீண்டல்கள்
கிளைத்த வேரின் சித்திரங்களோடு
வானேறும் அந்த பொழுதில்
ஆதிசிவனின் ரெளத்திரமுகமோ
மண்டையோட்டு மாலைகளோ
பொசுங்கும் பிணங்களின் துர்மணமோ
தெரிவதாயில்லை அவளுக்கு
லிங்க நர்த்தன கோர புணர்தலில்
உடலெங்கும் பிறைக்கீறல்கள்
மூச்சிறைத்து அடங்கும் உடல்களில்
எது அவனின் உடல்
எது சிவனின் உடல்

Older Posts

Blogger Template by Blogcrowds