எனக்கான சொற்சித்திரங்களில் கட்டமைக்கப்படுகிறாள்
இரவென்றும் பகலென்றும் தோற்றப்பிழையாகிறாள்
பிரிவின் முடி பற்றியிழுத்து வருகிறாள்
உறைநிலை யுடைத்த பனிக்கட்டியின்மேல் உப்பாகிறேன்
கொஞ்சம் மரத்தூள்களை தூவச்செய்கிறாள்
உருகும் நீரின் தூய்மை பற்றி பேசத்துவங்குகிறாள்
பொசுக்கும் ஒளியை குறுகிடச்செய்கிறாள்
நட்சத்திரங்கள் முளையிட்ட நாற்றங்காலில்
உடைந்த நகமாகிறாள்.

குறுக்காடும் மேகக்கோபம்
கணத்திற்கொன்றாய் தோற்றம் கொள்கிறது
புவிக்குள் நுழையும் ஒளிக்கீறலில்
அவள் பெயரை சொல்லிக்கொள்கிறேன்
முகமற்றவர்கள் நகரும் தெருவொன்றில்
ஒப்புமைத் தோற்றம் தேடியலைகையில்
எனக்கான கரிசனங்கள் உதிரத் துவங்குகின்றன.
இயல்பின் மொழி குலைந்த நாளொன்றில்
எதிர்படும் விலங்கொன்றை வன்மத்துடன் கொல்கிறேன்

இன்றைய இரவில் பொழியக்கூடும்
முகமூடி தொலைத்த நிலவொன்றின்
பாவனை நிரம்பிய பனி யொளி.

3 சொல்லிட்டுப்போனவங்க:

நல்ல அழகான வரிகள்...
அழகான கவிதையும் கூட...
வாழ்த்துக்கள்...

December 07, 2009 6:35 PM  

//
புவிக்குள் நுழையும் ஒளிக்கீறலில்
அவள் பெயரை சொல்லிக்கொள்கிறேன்
முகமற்றவர்கள் நகரும் தெருவொன்றில்
ஒப்புமைத் தோற்றம் தேடியலைகையில்
எனக்கான கரிசனங்கள் உதிரத் துவங்குகின்றன.
இயல்பின் மொழி குலைந்த நாளொன்றில்
எதிர்படும் விலங்கொன்றை வன்மத்துடன் கொல்கிறேன்
//

கென்,

இதை பாராட்டி எத்தனை சொன்னாலும் மொழி வலுவற்று போகும் என்பதால் எதுவும் சொல்லாது போகிறேன்....

December 08, 2009 2:59 AM  

நன்றி கமலேஷ் மற்றும் அது சரி

December 08, 2009 12:56 PM  

Newer Post Older Post Home

Blogger Template by Blogcrowds